கோவில்பட்டி அருகே பயங்கரம்: வியாபாரியை கொன்று உடல் எரிப்பு


தினத்தந்தி 16 Oct 2022 6:45 PM GMT (Updated: 16 Oct 2022 6:46 PM GMT)

கோவில்பட்டி அருகே வியாபாரியை கொன்று உடல் எரிக்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி, மகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று எரித்த மனைவி, மகள் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

மீன் வியாபாரி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது குருவிநத்தம். இந்த கிராமத்தில் தெற்கு தெருவில் குடியிருப்பவர் சவரிமுத்து மகன் ஞானசேகர் (வயது 42). மீன் வியாபாரி.

இவருடைய மனைவி சலேத்து ராணி (38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதே ஊரில் மேற்கு தெருவில் குடியிருப்பவர் சுடலையாண்டி மகன் கருப்பசாமி என்ற கார்த்திக் (24). தச்சு தொழிலாளி. திருமணம் ஆகாதவர்.

கண்டித்தார்

இந்த நிலையில் கருப்பசாமிக்கும், சலேத்து ராணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஞானசேகரின் 15 வயது மகளுடன் கருப்பசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் ஞானசேகருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மனைவி, மகள் மற்றும் கருப்பசாமி ஆகியோரை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, சலேத்து ராணி, 15 வயது மகள் ஆகியோர் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள ஞானசேகரை தீர்த்து கட்டினால்தான் நிம்மதியாக வாழ முடியும் என்று கருதி, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

கொலை

அதன்படி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஞானசேகர் வீட்டில் படுத்து தூங்கினார். அதன்பின்னர் கருப்பசாமி, ஞானசேகர் வீட்டுக்கு வந்தார். பின்னர் மிளகாய் பொடியை ஞானசேகரின் முகத்தில் தூவி கயிற்றால் கழுத்தை இறுக்கியுள்ளார். ஞானசேகரின் 15 வயது மகள் இரும்பு கம்பியாலும், மனைவி சலேத்து ராணி அரிவாளாலும் வெட்டினர். இதில் ஞானசேகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதைத்தொடர்ந்து ஞானசேகரின் உடலை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி வைத்து விட்டு, வீட்டை கழுவினர். அங்கிருந்த ஆயுதங்களையும் தண்ணீரால் கழுவிக்கொண்டனர்.

உடல் எரிப்பு

பின்னர் குளித்து விட்டு ஆடைகளை மாற்றினர். வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து வைத்தனர். தொடர்ந்து கள்ளக்காதலன் கருப்பசாமி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் தன்னுடைய காரில் பெட்ரோல் கேனை எடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து காரில் மீன் வியாபாரி ஞானசேகரின் உடலை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அச்சங்குளம் காட்டுப்பகுதிக்கு சென்றதும் காரை நிறுத்தி விட்டு உடலை இறக்கினர். அங்கு மண்எண்ணெய், பெட்ரோல் ஊற்றி ஞானசேகரின் உடலுக்கு தீ வைத்து எரித்தனர். பின்னர் காரில் அங்கிருந்து ஊருக்கு திரும்பினார்கள்.

போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்

நேற்று காலையில் கிராம மக்கள் பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் ஞானசேகர் உடல் இருந்தது. புகை மூட்டமும் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் இதுபற்றி பசுவந்தனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் சீதாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஞானசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சலேத்து ராணி, 15 வயது மகள், கள்ளக்காதலன் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தார்கள்.

மீன் வியாபாரியை கொடூரமாக கொலை செய்து, உடலை எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.


Next Story