திருடிய நகையுடன் பகுமானமாக 'போஸ்' கொடுத்து ஸ்டேட்டஸ் - 3 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பெண்


திருடிய நகையுடன் பகுமானமாக போஸ் கொடுத்து ஸ்டேட்டஸ் - 3 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பெண்
x
தினத்தந்தி 8 Oct 2022 9:13 AM GMT (Updated: 8 Oct 2022 9:14 AM GMT)

தென்காசியில் வேலைக்கு சென்ற வீட்டில் ரூ.4½ லட்சம் மதிப்பிலான நகை திருடிய பெண்ணை சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

தென்காசி:

தென்காசி சிவந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜவல்லி (வயது 69). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது வீட்டில் கடந்த 2019 -ம் ஆண்டு 16 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போய்விட்டது. இது குறித்து அவர் தென்காசி போலீசில் புகார் செய்தார். போலீசார் பல்வேறு குணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கில் துப்பு துலங்காமல் இருந்தது.

இந்த நிலையில் பங்கஜவல்லி செல்போனில் அவர் வீட்டில் வேலை பார்த்த ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மனைவி ஈஸ்வரி (40) என்பவரின் ஸ்டேட்டஸில் தனது வீட்டில் திருட்டு போன தங்கநகை இருப்பதை பார்த்து உள்ளார். ஈஸ்வரி அதனை தனது கழுத்தில் அணிந்து செல்பி எடுத்து பதிவு செய்துள்ளார். இது குறித்து தென்காசி போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார்.

இதுகுறித்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வி, பெண் போலீசார் தாமரை, மலர்கொடி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி ஈஸ்வரியை கைது செய்தனர். அவரிடம் கேட்டபோது அந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து திருட்டுப் போன சுமார் 4½ லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் ஈஸ்வரி 6 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் திடீரென வேலையில் இருந்து நின்று விட்டார் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அவர் எடுக்கவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு அவர் வேலையில் இருந்து நின்ற பிறகு சில நாட்கள் கழித்து பார்த்த போது பங்கஜவல்லியின் வீட்டில் இருந்த நகையை காணவில்லை.

இந்த நிலையில் தற்போது சில நாட்களுக்கு முன்பு ஈஸ்வரி ஒரு திருமண வீட்டிற்கு சென்று விட்டு அவரது உருவத்தை செல்போனில் செல்பி எடுத்துள்ளார. அப்போது அவர் பங்கஜவள்ளியின் வீட்டில் திருடிய நகையை தனது கழுத்தில் அணிந்து இருந்தார். அந்தப் படத்தை செல்போன் ஸ்டேட்டஸில் ஈஸ்வரி வைத்துள்ளார். இதனை பங்கஜவல்லி பார்த்த போது அது தனது நகை என்று தெரியவே போலீஸ்காருக்கு தகவல் தெரிவித்தார்.

நகையை திருடி விட்டு மூன்று ஆண்டுகள் கழித்து அந்த நகையை கழுத்தில் அணிந்து ஸ்டேட்டஸில் பதிவு செய்து சிக்கிக்கொண்ட பெண்ணால் தென்காசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story