திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா


திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
x

உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா விடிய விடிய நடைபெற்றது.

திருப்பூர்

உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா விடிய விடிய நடைபெற்றது.

மும்மூர்த்திகள்

உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இது உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு உள்ள ஒற்றைக் குன்றில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளி பல நூறு ஆண்டுகளாக பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்கள். கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தகன்னிகள், நவகிரக சன்னதிகளும் உள்ளன.

கோவிலின் அடிவாரத்தில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கங்கள் உள்ளன. பஞ்சலிங்கங்களை தழுவியவாறு குருமலையில் இருந்து சின்னஞ்சிறு ஓடையாக தவழ்ந்து வரும் தோணிநதி, தேனாறு, பாலாறு மற்றும் துணை ஆறுகளுடன் பஞ்சலிங்க அருவியில் ஒண்றிணைந்து பயணித்து அடிவாரப் பகுதியில் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள குன்றை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைகிறது.

அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்தால் உடலும் உள்ளமும் புத்துணர்வு பெறுவதுடன் பிணிகள் நீங்கி மனநிம்மதியும் கிடைப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். மும்மூர்த்திகளுக்கு மகாசிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் ஆண்டுதோறும் வருகின்ற மாசிமாத மகாசிவராத்திரி விழா பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகா சிவராத்திரி விழா

அந்த வகையில் நேற்று திருமூர்த்திமலையில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. அப்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் மேளதாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் பூலாங்கிணர் கிராமத்தில் இருந்து வேலூர், வாளவாடி, தளி ஆகிய ஊர்கள் வழியாக திருமூர்த்திமலைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பயபக்தியுடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள சப்பரத்தை வணங்கினார்கள்.

அப்போது அதன் மீது பக்தர்கள் நேர்த்திக்கடனாக வாழைப்பழம், கல்உப்பு மற்றும் மிளகு வீசி வழிபட்டனர். அவர்களுடன் விவசாயிகளும் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், கொண்டைக்கடலை, மக்காச்சோளம் மற்றும் சிறு தானியங்களை சப்பரத்துக்கு படைத்து வழிபட்டனர். இதனால் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு திருமூர்த்திமலை சென்றடைந்தது.

பக்தர்கள் பாதயாத்திரை

பின்னர் அங்கு தயாராக இருந்த மலைவாழ் மக்கள் தங்கள் குல வழக்கப்படி மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சப்பரத்தை குன்றின் மீது வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து கோவிலில் நான்கு ஜாம கால பூஜைகள் தொடங்கி இன்று காலை வரையிலும் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களிலும், பாத யாத்திரையாகவும் திருமூர்த்திமலைக்கு வந்தனர்.

இதையொட்டி சாலை நெடுகிலும் பக்தர்களுக்கு மோர், கம்பங்கூழ், அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சிவனுக்குரிய நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லி மும்மூர்த்திகளுக்கு நடைபெற்ற பூஜைக்கு தம்மால் இயன்ற அபிஷேக பொருட்களை கொடுத்தும் சாமி தரிசனம் செய்தனர்.

கலை நிகழ்ச்சிகள்

பக்தர்கள் கண்விழித்து நான்கு கால பூஜையில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கலை நிகழ்ச்சிகள், தேவராட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது. மேலும் கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளையும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக நேற்று போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவையொட்டி தளி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story