நியமனத்தேர்வை விரைந்து நடத்த வேண்டும்


நியமனத்தேர்வை விரைந்து நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 3 July 2023 4:22 PM GMT (Updated: 4 July 2023 9:08 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமனத்தேர்வை விரைந்து நடத்த வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'கடந்த 2013, 2017,2019, 2023 ஆகிய ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்று அரசாணை 149-ல் குறிப்பிட்டப்படி நியமன தேர்வுக்கு தயாராகி வருகிறோம். மற்ற அனைத்து அரசு வேலைகளிலும் மதிப்பெண் அடிப்படையில் தான் பணியமர்த்தப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் பி.ஜி. டி.ஆர்.பி. தேர்விலும் மதிப்பெண் முறையே பின்பற்றுகிறது.

அதனால் அரசாணை 149-ஐ விரைந்து செயல்படுத்தி நியமன தேர்வை நடத்த வழிவகை செய்ய வேண்டும். நியமன தேர்வை ரத்து செய்தால் இளைஞர்கள் ஆசிரியர் பணியை வெறுக்கும் அபாயம் உண்டாகும். எனவே நியமன தேர்வை நடத்தி ஆசிரியர் பணிநியமனம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் தகுதித்தேர்வு எழுதி நியமனத்தேர்வுக்காக காத்திருக்கிறார்கள்' என்று கூறியுள்ளனர்.


Next Story