வரி மேல்முறையீட்டு குழு, நியமன குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
சீர்காழி நகராட்சியில், வரி மேல்முறையீட்டு குழு, நியமனக்குழு உள்ளிட்ட உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலை அ.தி.மு.க., தே.மு.தி.க. உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
சீர்காழி:
நியமனக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்
சீர்காழி நகராட்சிக்கு, வரி மேல் முறையீட்டு குழு உறுப்பினர், நியமன குழு உறுப்பினர், ஒப்பந்த குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நகர்மன்ற கூடத்தில் நேற்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால் தலைமை தாங்கினார். மேலாளர் காதர்கான் முன்னிலை வகித்தார்.இந்த தேர்தலில் தலைவர் துர்கா ராஜசேகரன், துணைத் தலைவர் சுப்பராயன் உள்பட 24 நகர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
போட்டியின்றி தேர்வு
கூட்டத்தில், ஒப்பந்த குழு உறுப்பினர் பதவிக்கு தே.மு.தி.க.வை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவில் போதிய ஆவணங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையர் அறிவித்தார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த ராஜசேகரன் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர் ரமாமணி ஆகிய இருவரும் தேர்தலை புறக்கணித்து வெளியே சென்றனர்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினராக கலைச்செல்வி, நித்யாதேவி, சூரியபிரபா, முபாரக் அலி ஆகியோரும், நியமனக் குழு உறுப்பினராக ரேணுகாதேவி, ஒப்பந்த குழு உறுப்பினராக ராஜேஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையர் அறிவித்தார். அவர்களுக்கு நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.