திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்


திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
x

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

ஆடி அமாவாசை

திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வைகை ஆற்று கரையில் ஒவ்வொரு அமாவாசையன்று சிவகங்கை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கின்றனர். குறிப்பாக தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் ஏராளமான மக்கள் வருவது வழக்கம்.

இந்த நிலையில் ஆடி அமாவாசையையொட்டி காலை 6 மணி முதலே சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருப்புவனம் வைகை ஆற்றில் குவிந்தனர்.

முன்னதாக பக்தர்களின் வசதிக்காக வைகை ஆற்றில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்தவர்கள் பந்தல் மற்றும் வெளிப்பகுதியில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். இதையொட்டி மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காளையார்கோவில்

அதே போல ஆடி அமாவாசையை முன்னிட்டு காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஏராளமானோர் வந்தனர். அதிகாலையில் தெப்பக்குளத்தில் வெளியூர் மற்றும் உள்ளூரில் இருந்து நீண்ட வரிசையில் நின்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து தர்ப்பணம் செய்தனர். இதையொட்டி சொர்ண காளீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.



Next Story