செஸ் ஒலிம்பியாட் தொடரை தமிழக அரசு சிறப்பாக நடத்தி வருகிறது - அன்புமணி ராமதாஸ் பாராட்டு


செஸ் ஒலிம்பியாட் தொடரை தமிழக அரசு சிறப்பாக நடத்தி வருகிறது - அன்புமணி ராமதாஸ் பாராட்டு
x

செஸ் ஒலிம்பியாட் தொடரை தமிழக அரசு சிறப்பாக நடத்தி வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரை காண்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரை நேரில் பார்வையிட்டார்.

அதன் பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2013-ம் ஆண்டு உலக சாம்பியன் கார்ல்சென் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் இடையே நடைபெற்றது. அந்த போட்டியிலும் நான் கலந்து கொண்டேன். விஸ்வநாதன் என்னுடைய நண்பர் தான். செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த மிக சிறப்பான ஏற்பாடுகளை தமிழக அரசும், மத்திய அரசும் செய்துள்ளது.

ஒரு தமிழனாக பெருமை கொள்கிறேன். பண்பாடு, கலாசாரம், மொழி என அனைத்து உணர்வுகளையும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் வெளிப்படுத்தினார்கள்.

இது போன்று போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட் போட்டி என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. அதற்காக உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும்.

செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரை சிறப்பாக நடத்தி வரும் தமிழக அரசுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பாகிஸ்தான் அணி கலந்துகொள்ளாததற்கு காஷ்மீருக்கு 'டார்ச்' கொண்டு சென்றதையெல்லாம் ஒரு காரணமாக சொல்கிறார்கள்.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படம் இல்லாதது அவர்கள் பிரச்சினை. அதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story