தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கும் உரிமையை காக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கும் உரிமையை காக்க வேண்டும்  - அன்புமணி ராமதாஸ்
x

தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கும் உரிமையை காக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது,

வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 5 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். அவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி காங்கேசன் துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே அடுத்த கைது படலமும், அத்துமீறலும் நடந்திருக்கிறது. தமிழகத்தின் எதிர்ப்பும், கண்டனமும் சிங்கள அரசை அசைத்துக்கூட பார்க்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மீனவர்களை கைது செய்ததற்காக இலங்கை அரசுக்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இனி கைது செய்யக் கூடாது என்று இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும்.

கடந்த 2 நாட்களில் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும் விடுவிக்கவும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் வங்கக் கடல் மீன்பிடி உரிமையை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story