ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டை இலக்காக கொண்ட தமிழ்நாடு மின்வாகன கொள்கை: முதல்-அமைச்சர் வெளியிட்டார்


ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டை இலக்காக கொண்ட தமிழ்நாடு மின்வாகன கொள்கை: முதல்-அமைச்சர் வெளியிட்டார்
x

ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 1.50 லட்சம் வேலை வாய்ப்பு ஆகியவற்றை இலக்காக கொண்ட தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை,

மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன உற்பத்தியிலும், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையை மேம்படுத்தவும், மாறிவரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப மின்வாகன உற்பத்தித் துறையில் உள்ள சவால்களை திறமையுடன் எதிர்கொள்ளும் வகையிலும், ஒரு மாறுபட்ட கொள்கை அணுகுமுறையும், தற்போதைய கொள்கையில் சில மாற்றங்களும் தேவைப்படுகின்றன.

எனவே மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை வெகுவாக அதிகரிக்கும் நோக்கத்திலும், வினியோகம், தேவை, பயன்பாடுகள் மற்றும் சூழல் அமைப்பை நன்கு வலுப்படுத்திடும் வகையிலும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை-2023 என்ற திருத்திய கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இந்த கொள்கை, வெளியிடப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்

கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு, ஹுண்டாய், டி.ஐ. க்ளீன் மொபிலிடி, ராயல் என்பீல்ட், ஓலா எலெக்ட்ரிக், ஸியோன் சார்ஜிங், எச்.எல். மேண்டோ, ஏதெர் எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமைச் செயல் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கொள்கையின் இலக்கு

மின்வாகன உற்பத்தித்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த தமிழ்நாடு மின் வாகன கொள்கை-2023-ன் முக்கிய நோக்கமாகும்.

பொது போக்குவரத்து திட்டங்களை மின்மயமாக்குதல் மற்றும் 'ஸ்மார்ட் மொபிலிட்டி' திட்டங்களை ஊக்குவிப்பதற்காக பிரத்தியேகமாக மின் வாகன நகரங்கள் உருவாக்குதல், சரக்கு மற்றும் சேவை வரியை திரும்ப வழங்குதல், மூலதன மானியம், விற்றுமுதல் அடிப்படையிலான மானியம் அளித்தல், சிறப்பு மேம்பட்ட மின்கல வேதியியல் சலுகை வழங்குதல் என பல்வேறு வகைப்பட்ட முதலீட்டு சலுகைகளில் எதாவது ஒன்றையோ, மற்ற சலுகைகளையோ பெற வாய்ப்புகள் உள்ளன.

சிறப்பு ஊக்கச் சலுகைகள்

மின்னேற்ற நிலையங்களுக்கான ஊக்க சலுகைகள், பொது மின்கல மாற்று நிலையங்களுக்கான ஊக்கச் சலுகைகள், சாலை வரி விலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி ஆகிய பயன்களை 31.12.2025 வரை நீட்டிப்பு செய்தல், மின் ஆட்டோக்களுக்கான பதிவு மேற்கொள்ளுதலில் இருந்து விலக்கு அளிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் இ-2 டபுள்யு மற்றும் இ-4 டபுள்யு வாகனங்களுக்கு வர்த்தக அனுமதி பத்திரங்களை வழங்குதல், மின் வாகன மின்னேற்றுதலுக்கான (சார்ஜிங்) கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் மின்னேற்று நிலையங்களை அமைப்பதற்கான மூலதன மானியம் வழங்குதல் ஆகிய ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும்.

வழிகாட்டுதல் குழு

திறன் மேம்பாடு, புதிய கட்டிடங்கள், ஏற்கனவே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு நகரியங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட மின்சார வாகன மின்னேற்று உள்கட்டமைப்புக்கான மாதிரி கட்டிட விதிகள்-2016-க்கு ஏற்ப தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளுதல்;

மின் வாகனச் சூழலமைப்பை மேம்படுத்தும் வகையில், மின் வாகன தொழில் பூங்காக்கள் அமைத்தல், விற்பனையாளர் சூழலமைப்பை உருவாக்குதல், பிரத்யேக மின்வாகன இணையதளம் உருவாக்குதல், வழிகாட்டி நிறுவனத்தில் மின்வாகன ஆதரவுச் சேவை பிரிவு உருவாக்குதல், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் நெல்லை ஆகிய நகரங்களை மின் வாகன நகரங்களாக மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக தலைமைச் செயலாளர் தலைமையில், முக்கியத்துறைகளின் செயலாளர்களை உறுப்பினர்களாக கொண்ட மின் வாகன வழிகாட்டுதல் குழுவை மாற்றி அமைத்து, இக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சிறப்பு அம்சங்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தமிழ்நாடு மின்சார வாகன திருத்திய கொள்கை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் மின்சார வாகன உற்பத்தி கேந்திரமாக மாறி வருகிறது. இந்த வாகனங்களுக்கு தேவையான உபகரணங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்வதில் உற்பத்தியாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். கொரோனா பரவலால் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்த போதிலும் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்புள்ள மற்றும் 48 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் மின் வாகனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இந்த இலக்கை அடைய, தமிழ்நாட்டில் இயங்கும் வாகனக் போக்குவரத்தை மின்மயமாக்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழகம் எப்போதுமே இதில் நிலைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இந்த கொள்கையின்படி மின்சார வாகனங்களை அரசு தொழில்நுட்ப அடிப்படையில் பிரித்து, அதற்கேற்றபடியான வசதிகளை அளிக்க உள்ளது. பேட்டரிகளை மறுசுழற்சி செய்வது, பேட்டரிகளை விரைவாக மற்றும் மெதுவாக மின்னேற்றம் (சார்ஜ்) செய்யும் வசதி, எந்தவொரு மின்சார வாகனமும் சார்ஜ் செய்துகொள்ளக் கூடிய பொது நிலைய வசதி,

வணிக மின்சார வாகனங்களுக்கான விரைவு மின்னேற்ற தனியார் நிலைய வசதி, மின்னேற்றம் குறைந்த அல்லது இல்லாத பேட்டரிகளை கொடுத்துவிட்டு மின்னேற்றமுள்ள பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் நிலைய வசதி ஆகியவை பற்றிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஊக்கத் தொகை

தெற்கு ஆசியாவிலேயே தமிழகத்தை மின்சார வாகன உற்பத்தியின் முக்கிய கேந்திரமாக மாற்றுவது, மின்சார வாகனங்களுக்கு தேவையான மின்னேற்ற வசதிகளை பொது இடங்கள் மற்றும் தனியாரிடம் வீட்டு மின் கட்டணத்தில் அமைப்பது, மின்சார வாகனங்களுக்கான சுற்றுச்சூழலியலை மேம்படுத்துவது,

மின்சார சைக்கிள் மற்றும் வணிக ரீதியான மின்சார இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், மின்சார பஸ்கள் ஆகியவற்றுக்கு பேட்டரியின் திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகை (20 சதவீதம்) வழங்குதல் ஆகியவை இந்த கொள்கையின் நோக்கமாக உள்ளது.

எரிபொருள் மூலம் இயங்கும் வணிக வாகனங்களை (ஏ.ஆர்.ஏ.ஐ. தரம் கொண்ட 2 சக்கரம் மற்றும் 3 சக்கர வாகனங்கள்) மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கு 31.12.2025 வரை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story