நடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்


நடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்
x

கோப்புப்படம் 

சேலம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே சுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (36 வயது), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி இந்துமதி (32 வயது). இவர்களுக்கு வேல்முருகன் (13 வயது) என்ற மகன் உள்ளார். சுரேஷ் தனது குடும்பத்துடன் மனைவியின் ஊரான அயோத்தியாப்பட்டணம் ராம்நகரில் வசித்து வந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக மனைவியின் நடத்தையில் சுரேஷ் சந்தேகப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனைவியின் மீது கோபத்தில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்துமதி பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு தூங்க சென்றார். சுரேஷ், மகன் வேல்முருகனுடன் வீட்டில் தூங்கினார்.

நேற்று காலை கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த இந்துமதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். கொலை செய்துவிட்டு தப்பி செல்லாமல் சுரேஷ் வீட்டிலேயே இருந்தார்.

இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுரேசை கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story