இடுபொருட்களை உற்பத்தி செய்யும் குழுக்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்


இடுபொருட்களை உற்பத்தி செய்யும் குழுக்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்
x

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை இடுபொருட்களை உற்பத்தி செய்யும் குழுக்களுக்கு அலகு ஒன்றிற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரூ.1 லட்சம் மானியம்

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் 2022-23-ம் ஆண்டில் இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மண்புழு உரம், பஞ்காவ்யா, ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், மீனமிலம் போன்ற இயற்கை வேளாண் இடுபொருட்களின் உற்பத்தி அலகுகளை நிறுவ மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு இயற்கை விவசாய ஆர்வலர் குழு அல்லது இயற்கை விவசாய மகளிர் குழு அல்லது உழவர் உற்பத்தியாளர் குழு அல்லது பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்ட விவசாயிகள் குழுக்களுக்கு மானிய உதவியாக அலகு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வீதம் 3 அலகுகளுக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லது சிறு, குறு பெண் விவசாயிகள் அடங்கிய குழுக்கள் மற்றும் நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்திடும் கிராம பஞ்சாயத்துகளை சார்ந்த விவசாயிகள் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழுவினர் தங்களது இயற்கை வேளாண் இடுபொருட்களின் உற்பத்தி அலகினை ஒரு செயல்விளக்க அலகாக பராமரிக்க அனுமதிக்க வேண்டும். இது தொடர்பான உறுதிமொழிப் பத்திரம் பயனாளிகளிடம் பெற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யப்பட்டபின் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழுக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு உற்பத்தியை தொடர வேண்டும். மானியம் பெறும் குழு திட்டக் கூறுகளை செயல்படுத்தும் போதும், செயல்படுத்திய பின்பும் புகைப்பட ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் குழுக்கள் முழு முகவரியுடன் குழுவின் பெயர், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குழுவின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் விரிவான திட்ட அறிக்கையினை நாளைக்குள் (சனிக்கிழமை) சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். எனவே, விருப்பமுள்ள குழுக்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story