'நாளைக்கு லீவ் விடுங்க மேம் ப்ளீஸ்' மாணவர்கள் கோரிக்கை - சுவாரஸ்யங்களை பகிர்ந்த கலெக்டர்...!


நாளைக்கு லீவ் விடுங்க மேம் ப்ளீஸ் மாணவர்கள்  கோரிக்கை - சுவாரஸ்யங்களை பகிர்ந்த கலெக்டர்...!
x
தினத்தந்தி 12 Oct 2022 8:24 AM GMT (Updated: 12 Oct 2022 12:22 PM GMT)

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கேட்டு மாணவர்களிடமிருந்து தனக்கு இன்ஸ்டாவில் மூலம் கிடைத்த குறுஞ்செய்திகளை ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு.

புதுக்கோட்டை,

மழைக்காலம் தொடங்கி விட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை என்ற செய்தி தான் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். காலை 6 மணிக்கே எழுந்து, டிவி முன் உட்கார்ந்து நமது மாவட்டத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளதா, விடப்படுகிறதா என செய்தி சேனல்களை பார்த்துக் கொண்டிருப்பதை நாம் காண முடியும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய சூழலில், ஒரு படி மேலே சென்று, விடுமுறை விட வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கே சமூக வலைதளத்தில் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது இந்த சம்பவம்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக இருப்பவர் கவிதா ராமு. இவரிடம் மாணவர்கள் சிலர், இன்ஸ்டாகிராமில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று பல விதமாக குறுஞ்செய்திகள் அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளனர். 'நாளைக்கு லீவ் விடுங்க மேம் ப்ளீஸ்', ' தேர்வில் மார்க் வாங்கலன்னா எல்லாரும் கேப்பாங்க மேம். உங்களையே நம்பியிருக்கேன்' , 'லீவ் விட்டதற்கு நன்றி மேம். உங்களை மறக்கவே மாட்டேன். என் தேவதை நீங்கள்' என்று நகைச்சுவையாக கோரிக்கைகளும், மழையை முன்னிட்டு விடுமுறை அளித்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த படங்களை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story