கல்லூரி விடுதி உணவில் பல்லி கிடந்ததால் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்


கல்லூரி விடுதி உணவில் பல்லி கிடந்ததால் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
x

கல்லூரி விடுதி உணவில் பல்லி கிடந்ததால் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

திருச்சி

துறையூர்:

வாந்தி-மயக்கம்

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர், கல்லூரி வளாகத்திற்குள் உள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் விடுதியில் உள்ள மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதனை மாணவர்கள் சாப்பிட்ட நிலையில், அந்த உணவில் பல்லி கிடந்ததாக மாணவர்கள் கூறியதால், உணவு சாப்பிட்ட மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் சிறிது நேரத்தில் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக விடுதியிலேயே சரிந்தனர். இதையறிந்த கல்லூரி நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மாணவ, மாணவிகள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோர்கள் புகார்

இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று கூறி, அவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் செல்போன் வாயிலாகவும், நேரில் சென்றும் தங்கள் பிள்ளைகளிடம் நலம் விசாரித்தனர்.

இது பற்றி பெற்றோர்களிடம் கேட்டபோது, இந்த கல்லூரியில் வளர்ச்சி நிதி என்ற பெயரில் பல லட்சங்களை பெற்றுக்கொண்டும், கட்டண தொகையாக சில லட்சங்களை பெற்றுக்கொண்டும் தரமில்லாத உணவுகளை மாணவ-மாணவிகளுக்கு கொடுத்து வந்ததாகவும், விடுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என்று தங்கள் பிள்ளைகள் அடிக்கடி கூறி வந்ததாகவும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்குள் தரமில்லாத உணவு கொடுப்பதைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாகவும், மாணவர்களின் நலனில் எவ்வித அக்கறையும் கல்லூரி நிர்வாகம் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில் விடுதியில் இருந்த மாணவர்கள் கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் சாலையில் இருந்து கலைந்து சென்று கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்தது. இது பற்றி தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பரண்டு யாஸ்மின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மாணவர்களுக்கு என்று தனி கமிட்டி அமைக்குமாறு நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதோடு, மாணவர்களுக்கு தரமான உணவு, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். அப்போது துறையூர் தாசில்தார் வனஜா உடனிருந்தார். இதையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story