மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:47 PM GMT)

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் படிக்கும் விழுப்புரம் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மேற்கண்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ-மாணவிகள் ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கலாம்

இந்த கல்வி உதவித்தொகைக்கு 2023-2024-ம் கல்வியாண்டில் புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரியில் இருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் 2023-24-ம் நிதியாண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசிநாள்

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை- 5 முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் 12-ந் தேதிக்குள் மற்றும் புதிய விண்ணப்பங்களை அடுத்த ஆண்ட(ஜனவரி) 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story