ஒப்பந்த செவிலியர்கள் மனு அனுப்பும் போராட்டம்


ஒப்பந்த செவிலியர்கள் மனு அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2023 6:45 PM GMT (Updated: 9 Jan 2023 6:45 PM GMT)

பணி நிரந்தரம் செய்யக்கோரி கிருஷ்ணகிரியில் ஒப்பந்த செவிலியர்கள் மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கொரோனா பாதிப்பு காலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களின் பணிக்காலம் கடந்த டிசம்பர் 31-ந் தேதி முடிவடைந்தது. அவர்களை பணியில் இருந்து விடுவிக்க கூடாது என பல தரப்பினர் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் 2,400 செவிலியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட 40 ஒப்பந்த செவிலியர்கள் நேற்று கிருஷ்ணகிரி தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முழு தகுதியின் அடிப்படையில் தங்களை பணியில் சேர்க்கப்பட்டதாலும், கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி உள்ளதாலும், தங்களை பணியில் சேர்த்து நிரந்தரப்படுத்த வேண்டும் என்று செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story