கிராமமக்கள் கூடாரம் அமைத்து போராட்டம்


கிராமமக்கள் கூடாரம் அமைத்து போராட்டம்
x
தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:48 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊரை காலி செய்து கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊரை காலி செய்து கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சுற்றி 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லிகற்களை ஏற்றி கொண்டு டிப்பர் லாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் லாரிகள் செல்லும் போது எழும் தூசியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் அந்த கிராம மக்கள் கல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி பல இடங்களில் மனு அளித்தனர். மேலும் லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் கடந்த 2-ந் தேதி கொரட்டகிரி கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறி ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற சென்றனர். அவர்களிடம் போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பினர். ஆனால் அதிகாரிகள் கூறியபடி கல் குவாரிகளை மூட உரிய நடவடிக்கை எடுக்காததால் ஜல்லிகற்கள் மற்றும் எம்.சாண்ட் ஏற்றி கொண்டு லாரிகள் மீண்டும் கிராமத்தின் வழியாக சென்று வந்தன.

கூடாரம் அமைத்து போராட்டம்

இந்தநிலையில் கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் கிராம மக்கள் கால்நடைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் ஊரை காலி செய்து ஊரின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அவர்கள் குழந்தைகள், கால்நடைகளுடன் தங்கியதால் ஊரே வெறிச்சோடியது.

இதனிடையே நேற்று ஊருக்குள் செல்லும் சாலையை முட்செடிகளை வைத்து மக்கள் அடைத்தனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கொட்டும் மழையில்...

அப்போது கல்குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதாகவும், ஒரு கமிட்டி அமைத்து அதன் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு நீங்கள் ஆய்வு செய்து வரும் வரை நாங்கள் கூடாரத்திலேயே காத்திருக்கிறோம். இதில் சமூக உடன்பாடு ஏற்படவில்லை எனில் குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம் என கிராம மக்கள் கூறி கொட்டும் மழையில் சமைத்து சாப்பிட்டு அங்கேயே குழந்தைகளுடன் தங்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் போராட்டத்தில் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Next Story