2 வாலிபர்களை சிறைபிடித்து போராட்டம்


2 வாலிபர்களை சிறைபிடித்து போராட்டம்
x

அரூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து பணம் எடுத்த 2 வாலிபர்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே செயல்பட்டு வரும் 2 தனியார் ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடந்த மே மாதம் முதல் நேற்று முன்தினம் வரை தங்கள் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க சென்றனர். அப்போது, பணம் எடுத்ததற்கான ரசீது மட்டும் வந்ததாகவும் ஆனால் பணம் எந்திரத்திற்குள்ளேயே நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று இது குறித்து முறையிட்டனர். இந்நிலையில், நேற்று சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரத்தை 2 வாலிபர்கள் கழற்றி அதிலிருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அந்த பகுதி வழியாக சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி கேட்டபோது அந்த 2 பேரும் ஏ.டி.எம். எந்திரங்களை பழுது பார்க்க வந்ததாக கூறினர். அப்போது சந்தேகம் ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் 2 வாலிபர்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story