நிலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


நிலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

மூங்கில்துறைப்பட்டு அருகே நிலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே வடமாமாந்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து புதிதாக ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் கோவிலில் கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 5 மணிக்கு கோபூஜை நடைபெற்றது. பின்னர் 2-ம் கால யாக சாலை பூஜை, மூலமந்திர ஹோமம், நாடிசந்தானம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம்புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story