சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 15 Jun 2023 7:15 PM GMT (Updated: 15 Jun 2023 7:15 PM GMT)

பிரதோஷத்தையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்

சிறப்பு வழிபாடு

பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் காலையில் சுவாமி காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் கோவிலில் உள்ள நந்தி மற்றும் கொடிமரத்துக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி 3 முறை வலம் வந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் திண்டுக்கல் கோபால சமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், மலையடிவாரம் ஓதசுவாமிகள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறுமலை

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் உள்ள வெள்ளிமலை சிவன் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சாமிக்கு பால், தயிர், பழம், இளநீர், சந்தனம், அரிசி மாவு உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிவப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம், கோபால்பட்டி

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில், வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ேகாவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.

கோபால்பட்டி கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை மூலவரான கபாலீஸ்வரர் மற்றும் நந்திக்கு சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story