சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்

பிரதோஷ நாட்களில், சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமி காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் கோவிலில் உள்ள நந்தி மற்றும் கொடிமரத்துக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு கோவில் உள் பிரகாரத்தில் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் 3 முறை வலம் வந்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் திண்டுக்கல் கோபால சமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதேபோன்று திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், மலையடிவாரம் ஓதசுவாமிகள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி கைலாசநாதர், செண்பகவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதேபோல் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, வில்வம், சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதில் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கோபால்பட்டி கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி கபாலீஸ்வருக்கு சந்தனம், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் கோபால்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story