அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர்

ஆடி வெள்ளிக்கிழமை

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்மனுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினால் திருமண தடை நீங்கும், குழந்தை இல்லாதோருக்கு மகப்பேறு கிட்டும், வாழ்க்கையில் சகல துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் நேற்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

பயபக்தியுடன் வழிபாடு

தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கோவிலின் முன்பு தீபமேற்றியும், சூடமேற்றியும், உப்பு வைத்து பயபக்தியுடன் வழிபாடு நடத்தினர். பின்னர் கோவிலின் முன்புற பகுதியில் பக்தர்கள் சார்பில் கூழ், பொங்கல், சுண்டல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

வேம்பு மாரியம்மன்

இதேபோல் கரூர் பசுபதிபுரத்தில் உள்ள வேம்பு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன், கும்ப மகாலட்சுமி வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல தாந்தோன்றிமலையில் உள்ள ஊரணி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் மலைவீதியில் மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்பட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டும், மலர்கள், எலுமிச்சை பழங்களால் மாலை அணிவிக்கப்பட்டும் சிறப்பு பூஜை நடந்தது.

நொய்யல்

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வராகி அம்மன்

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூர் பிரம்ம தீர்த்தம் சாலையில் உள்ள வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு ஒரு லட்சத்து எட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பழம், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடா்ந்து மலர்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story