மோட்டார் வாகன விபத்து குறித்த சிறப்பு மக்கள் நீதிமன்றம்


மோட்டார் வாகன விபத்து குறித்த சிறப்பு மக்கள் நீதிமன்றம்
x
தினத்தந்தி 11 March 2023 6:45 PM GMT (Updated: 11 March 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் மோட்டார் வாகன விபத்து குறித்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மோட்டார் வாகன விபத்து குறித்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் வாகன விபத்து தொடர்பான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி தலைமையில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 3 அமர்வுகளில் சமாதானமாக செல்லக் கூடிய மோட்டார் வாகன விபத்து, நஷ்டஈடு வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

ரூ.82 லட்சம் தீர்வு

இதில் நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்காடிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 16 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதில் 8 வழக்குகளுக்கு தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.82 லட்சத்து 23 ஆயிரம் ஆகும்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும் சார்பு நீதிபதியுமான எம்.பீரித்தா, முதுநிலை நிர்வாக உதவியாளர் எஸ்.தாமரை செல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் ஏ.முத்து லெட்சுமி, பணியாளர்கள் டி.பால் செல்வம், ஏ.நம்பிராஜன், ஆர்.சத்யா பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

இதுதவிர கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர் மங்கலம் அரசு ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் காசிராஜ் (வயது 49). வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டு கோவில்பட்டி-எட்டயபுரம் பிரதான சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதி உயிரிழந்தார். இந்த வழக்கில் உரிய நிவாரணம் கோரி தூத்துக்குடி 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, லாரியின் காப்பீட்டு கழகம் உயிரிழந்த காசிராஜ் குடும்பத்தினருக்கு ரூ.72 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். காசிராஜ் குடும்பத்தினர் சார்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜரானார்.


Next Story