எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு


எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு
x

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளின் விசாரணைக்கு தடை கேட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மீண்டும் நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு.

சென்னை,

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை, எஸ்.பி வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இதேபோல் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்த வழக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த இரண்டு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது எஸ்.பி வேலுமணி சார்பில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜரானார். அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து ஜூலை 18'க்குள் பதிலளிக்க அறப்போர் இயக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என எஸ்.பி வேலுமணியின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.


Next Story