தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் இதுவரை 14 ஆயிரத்து 413 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் இதுவரை 14 ஆயிரத்து 413 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:47 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 14 ஆயிரத்து 413 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 14 ஆயிரத்து 413 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

தேசிய மக்கள் நீதிமன்றம்

நீதிமன்றங்களில் அதிகமான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இந்த வழக்குகளை விரைவாக முடிக்கும் வகையில் வழக்கு தொடுப்பவருக்கும், வழக்காளருக்கும் சமரசமாக தீர்வு ஏற்படும் வகையில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு லோக் அதாலத் முறையை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக வழக்கில் இருதரப்பிற்கும் சமரசம் ஏற்பட்டு தீர்வு காணப்படுகிறது.

தூத்துக்குடியில் இந்த ஆண்டின் 4-வது தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 2 அமர்வுகளும், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய இடங்களில் தலா ஒரு அமர்வு வீதம் மொத்தம் 14 அமர்வுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

தீர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற முதல் அமர்வில் 2 ஆயிரத்து 897 வழக்குகளும், 2-வது முறையாக 3 ஆயிரத்து 200 வழக்குகளும், 3-வது முறையாக 4 ஆயிரத்து 579 வழக்குகளும் தீர்வு காணப்பட்டு உள்ளது.

4-வது முறையாக இன்று நடந்த (அதாவது நேற்று) தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 922 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 3 ஆயிரத்து 737 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 14,413 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது" என்றார்.

தேசிய மக்கள் நீதிமன்ற தொடக்க நிகழ்ச்சியில் போக்சோ நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், லோக் அதாலத் தலைவர் உமா மகேஸ்வரி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் செல்வகுமார், சார்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா, முனிசிப் நீதிபதி சுமிதா, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் குபேர சுந்தர், கனிமொழி, ஜெயந்தி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story