2 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது


2 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 March 2023 6:45 PM GMT (Updated: 25 March 2023 6:45 PM GMT)

வல்லநாட்டில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

வல்லநாட்டில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன தணிக்கை

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜன் மற்றும் போலீசார் ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்கல் சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வல்லநாட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 35 ரேஷன் சணல் சாக்கு மூட்டைகளும், 10 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளும் ஆக மொத்தம் 40 மூட்டைகளில் சுமார் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து வாகனத்தில் இருந்த மகேஷ்குமார், ஜான் அனிஷ் ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடைபெற்ற தொடர் விசாரணையில், ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கேரளாவிற்கு கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனத்தை போலீசார் கைப்பற்றினர்.


Next Story