கொத்தடிமை முறை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்;மாவட்ட நீதிபதி பல்கீஸ் பேச்சு


கொத்தடிமை முறை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்;மாவட்ட நீதிபதி பல்கீஸ் பேச்சு
x

கொத்தடிமை முறை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று மாவட்ட நீதிபதி பல்கீஸ் கூறினார்.

பெரம்பலூர்

சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சர்வதேச நீதிக்குழுமம், தனியார் அறக்கட்டளை ஆகியவை இணைந்து கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்ட உதவி முகாமை நடத்தியது. முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பல்கீஸ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

மக்களாகிய நாம் வேலை செய்யும்போது, அதற்கான சரியான ஊதியத்தை பெறுவது இந்திய அரசியல் சட்டத்தின்படி உரிமையாக்கப்பட்டுள்ளது. கட்டாயப்படுத்தியோ, முன் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து, குறைந்த ஊதியம் வழங்கியோ, அதிக நேரம் வேலை வாங்குவது போன்ற செயல்கள் கொத்தடிமை முறையாவதால், இது போன்ற செயல்கள் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்திய அரசியல் சட்டமானது பல்வேறு பிரிவுகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பினை உறுதிபடுத்தி உள்ளது.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு

கொத்தடிமை முறையில் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வினை ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆய்வுகளை மேற்கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலேயே முற்றிலும் கொத்தடிமை தொழிலாளர் முறை இல்லா நிலையினை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதிமொழியை ஏற்று செயல்பட வேண்டும். அதற்கான முயற்சியாகத்தான் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கொத்தடிமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அமைப்பு சாரா தொழிலாளர்களிடம் வழங்கினார். மாவட்டத்தில் கொத்தடிமை முறை இருந்தால் பொதுமக்கள் உடனடியாக உதவி எண்ணான 18004252650 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலோ புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

அடையாள அட்டை

கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழித்திடும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. முகாமில் தொழிலாளர் நலத்துறையில் அடையாள அட்டை வழங்குவதற்காக தொழிலாளர்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், சர்வதேச நீதிக்குழுமத்தின் வக்கீல் பிரபு, கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான (பொறுப்பு) அண்ணாமலை வரவேற்றார். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் கலைவாணன் நன்றி கூறினார்.


Next Story