முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு;அடுத்த மாதம் 9-ந்தேதி ஆஜராக உத்தரவு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு;அடுத்த மாதம் 9-ந்தேதி ஆஜராக உத்தரவு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்காக அடுத்த மாதம் 9-ந்தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்

சி.வி.சண்முகம் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா நாட்டார்மங்கலம் பஸ் நிலையம் அருகில் கடந்த 7.3.2023 அன்று அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், தமிழக அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் டி.எஸ்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார்.

ஆஜராக உத்தரவு

இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணை அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட சி.வி.சண்முகம் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.


Next Story