சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீன் பலகாரத்தில் எலி ஓடிய விவகாரம் - அதிரடி உத்தரவு


x

பஜ்ஜி, போண்டா வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி கூண்டுக்குள் எலி ஒன்று நடமாடிக் கொண்டு இருந்ததை பார்த்து அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை,

சென்னை ராயபுரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதுபோக நூற்றுக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் என பலரும் மருத்துவமனைக்கு வருகை தருவதால் ஸ்டான்லி மருத்துவமனை வளாகம் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும்.மருத்துவமனைக்கு வருபவர்களின் வசதிக்காக மருத்துவமனை வளாகத்தில் தனியார் நடத்தி வரும் கேண்டீன் ஒன்றும் உள்ளது. இந்த கேண்டீனில் வைக்கப்பட்டு இருந்த பஜ்ஜி, போண்டா உள்பட நொறுக்குத்தீனி வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பஜ்ஜி, போண்டா வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி கூண்டுக்குள் எலி ஒன்று நடமாடிக் கொண்டு இருந்ததை பார்த்து அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எலி ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். பொதுமக்களின் புகாரை தொடர்ந்து கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.


Next Story