தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.27 கோடிக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.27 கோடிக்கு தீர்வு
x

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு ரூ.27 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு ரூ.27 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 9 தாலுகாக்களில், மொத்தம் 23 அமர்வுகளுடன் நடைபெற்றது. நெல்லை கோர்ட்டில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான குமரகுரு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன், 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி குமரேசன், மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நடுவர் மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, ஊழல் தடுப்பு விசாரணை நீதிபதி செந்தில்முரளி, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தானம், 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வள்ளியம்மா, மாஜிஸ்திரேட்டுகள் திருவேணி, ஆறுமுகம், விஜய் ராஜ்குமார், பாக்கியராஜ், கவிபிரியா, அருண்குமார், நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ரூ.27 கோடிக்கு தீர்வு

இதில் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 7,063 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அவற்றில் 4,372 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.24.68 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

மேலும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களாகிய வங்கி கடன் வழக்குகள் மொத்தம் 471 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 159 வழக்குகளில் ரூ.2.40 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் பல்வேறு வழக்குகளுக்கு 27 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.


Next Story