புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கஅனுமதி வழங்க இயலாது
புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்க இயலாது
புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு அனுமதி வழங்க இயலாது என்று திருவாரூரில், அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
நெல் மாநாடு
திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய பாரம்பரிய நெல் மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் அமைச்சர் மெய்யநாதன், மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், பிரான்ஸ் நாட்டின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜூலியன்ஜின் மலார்டு ஆடம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வு கட்டுரைகள்
பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள சத்துக்கள் குறித்து அறிவியல் பூர்வமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநாட்டில் ஆய்வு கட்டுரைகளை மாணவர்கள் சமர்பித்தனர்.
பாரம்பரிய அரிசிகளில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பாரம்பரிய அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில் அதற்கான பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்தும் மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.
அனுமதி வழங்க இயலாது
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருந்து வருகிறது. இந்த மாவட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணை இமை காப்பது போல காத்து வருகிறார்.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி கேட்டாலும் அனுமதி வழங்க இயலாது. அரசின் சார்பில் குறுங்காடுகள் அமைக்கப்படும். ஆண்டு ஒன்றுக்கு 10 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.