ஐசியு வில் உள்ள செந்தில்பாலாஜியால் பேசக்கூட முடியவில்லை - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


ஐசியு வில் உள்ள செந்தில்பாலாஜியால் பேசக்கூட முடியவில்லை -  அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x
தினத்தந்தி 14 Jun 2023 3:15 AM GMT (Updated: 14 Jun 2023 3:18 AM GMT)

செந்தில் பாலாஜியின் சிகிச்சை பெறும் அறை துணை ராணுவப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சென்னை,

மின்சார துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்ததீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் பணியமர்த்திய போது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு பணி வாங்கித் தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அழைத்து சென்ற போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்தநிலையில், சிகிச்சை பெற்று வரும் செந்தில்பாலாஜியை சந்திக்க அமைச்சர்கள் நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில்மகேஷ் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்த பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

செந்தில் பாலாஜி நெஞ்சு வலியில் படுத்துள்ளார். அவரால் பேசக்கூட முடியவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்து கண்காணித்து வருகிறார்.செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை, காத்திருந்து அனுமதி வாங்கிய பின் நேரில் சந்தித்தேன். செந்தில் பாலாஜியின் சிகிச்சை பெறும் அறை துணை ராணுவப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.


Next Story