கத்தரிகோலால் குத்தி பெண் படுகொலை


கத்தரிகோலால் குத்தி பெண் படுகொலை
x
தினத்தந்தி 31 May 2023 8:30 PM GMT (Updated: 1 Jun 2023 3:30 AM GMT)

கோவை அருகே கத்தரிகோலால் குத்தி பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கள்ளக்காதலன் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

கோயம்புத்தூர்

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி பகுதியை சேர்ந்தவர் மதுரை வீரன் (வயது 40). டெய்லரான இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மதுரை வீரன் நேற்று காலையில் நிலக்கோட்டையில் உள்ள 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர் நான் கோவை மாவட்டம் சின்னத்தடாகம் மாரியம்மன் கோவில் தெருவில் குடியிருந்து வரும் சித்ரா (35) என்ற பெண்ணை கொலை செய்துவிட்டதாக கூறி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். அத்துடன் இது குறித்து கோவை சின்னத்தடாகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீசார் அந்த முகவரிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒரு அறையில் பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அவருடைய உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. உடனே போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அந்த பெண் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் அந்தபெண் தேனி மாவட்டத்தை சேர்ந்த சித்ரா (35) என்பதும், சின்னத்தடாகம் பகுதியில் கடந்த 8 மாதமாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்ததும் தெரியவந்தது. அத்துடன் அவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் வெளியான தகவல் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

சிலுக்குவார்பட்டியை சேர்ந்த மதுரை வீரன் தனது மனைவி வீரம்மாள் மற்றும் 2 மகன்களுடன் கோவை அருகே வசித்து வந்தார். இந்த நிலையில் கணவரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் வீரம்மாள் தனது மகன்களை அழைத்துக்கொண்டு தேனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில்தான் வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்த சித்ராவுக்கும், மதுரை வீரனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் கடந்த 4 மாதமாக சின்னத்தடாகம் பகுதியில் வீடு எடுத்து கணவன்-மனைவி போன்று வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே சித்ராவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. மதுரை வீரன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் ஆண்கள் பலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதை அறிந்த மதுரை வீரன் தனது கள்ளக்காதலியை கண்டித்து உள்ளார்.

கடந்த 29-ந் தேதி மதுரை வீரன், சித்ராவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவர் நீண்ட நேரமாக ஒருவரிடம் பேசிக்கொண்டே இருந்தார். உடனே வீட்டுக்கு சென்றதும் இது தொடர்பாக அவர் கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சித்ரா, நான் அப்படிதான் பேசுவேன், நான் பல ஆண்களுடன் பழகுவேன்... அதை கேட்க நீ யார்?... என்னிடம் நீ எப்படி கேட்கலாம் என்று கேட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மதுரை வீரன், தான் வைத்திருந்த கத்தரிகோலை எடுத்து சித்ராவின் வயிறு, கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இங்கு இருந்தால் தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று நினைத்த மதுரை வீரன், வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்து இருக்கிறார். இந்த கொலை தொடர்பாக இன்னும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக சிறையில் இருக்கும் மதுரை வீரனிடம் விசாரணை நடத்தினால்தான் முழு விவரமும் தெரியவரும். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக அவர்கள் ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்ய உள்ளனர்.

கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story