விளையாட்டு வீரர்- வீராங்கனைகளுக்கான உதவித்தொகை


விளையாட்டு வீரர்- வீராங்கனைகளுக்கான உதவித்தொகை
x

விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கான சிறப்பு உதவித்தொகை பெற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கான சிறப்பு உதவித்தொகை பெற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு உதவித்தொகை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன் மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைக்கான (ஒலிம்பிக் போட்டிகளுக்கு மட்டும்) எலைட் திட்டம், சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம்(எம்ஐஎம்எஸ்)், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் (சிடிஎஸ்) என 3 வகைகளில் செயல்படுத்தப்படுகிறது.மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

ரூ.25 லட்சம் வரை...

தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைக்கான எலைட் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரையும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் ரூ.10 லட்சம் வரையும், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் நாகை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 15-ந்தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

இணையவழி விண்ணப்பம்

ஏற்கனவே அஞ்சல் வழியில், நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும் மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் செயலியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல் அறிய 9514000777 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story