வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:45 PM GMT)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலையும் கிடைக்காமல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக்கணக்கில் காலாண்டிற்கு ஒருமுறை வரவு வைக்கப்படும். இ்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து, பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு

ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர், 40 வயதுக்கு மிகாமலும், மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூர கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கற்பவர்கள் உதவி தொகை பெறலாம். ஏற்கனவே, உதவித்தொகை பெறுபவர்கள் வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெறலாம்.

காலாண்டுக்கு ஒருமுறை

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அரசின் வேறு உதவித்தொகை எதுவும் பெறுதல் கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000-ம் காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதிஉள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே, இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறாத தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். இ்த்தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.


Next Story