மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 8 Oct 2022 6:45 PM GMT (Updated: 8 Oct 2022 6:46 PM GMT)

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறினார்.

சிவகங்கை

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறினார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கல்வி உதவித்தொகை

கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சிறுபான்மையினர் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-2023 கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ, ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

குறியீட்டு எண்

தகுதியான சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு வருகிற 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையதளத்தில் சரிபார்க்க இயலும். புதிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCTV குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

கூடுதல் விவரம்

இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http:www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்ட தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story