துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக தர்ணா


துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக தர்ணா
x
தினத்தந்தி 1 July 2023 6:45 PM GMT (Updated: 1 July 2023 6:45 PM GMT)

பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகரசபை தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்

கடலூர்

பண்ருட்டி

28 பேர் பணி நீக்கம்

பண்ருட்டி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்த்து வந்த தொழிலாளர்கள் 28 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி கடந்த 2 நாட்களாக நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று பண்ருட்டி நகர சபை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 28 துப்புரவு தொழிலாளர்களிடம் நகர சபை தலைவர் ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நகரசபை ஆணையர் மகேஸ்வரி, தொழிலாளர் ஒப்பந்ததாரர் பிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் குளோப், செயலாளர் பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீண்டும் பணி

அப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட 28 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் மீண்டும் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நகர சபை தலைவர் ராஜேந்திரன் பேசும்போது, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட எந்த ஊழியர்களையும் நாங்கள் பணி நீக்கம் செய்யவில்லை. பணிகளை சரியாக செய்யாமல் இருந்தவர்கள் மீது ஒப்பந்ததாரர் நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது தொழிலாளர் களிடம் வேண்டுகோளை ஏற்று மீ்ண்டும் அவர்களை சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. இனி ஒழுங்கான முறையில் பணிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பணி ஒழுங்காக நடைபெறா விட்டால் மீண்டும் இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என்றார். இதையடுத்து ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story