அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம்


அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம்
x

பள்ளிக்கல்வி அடித்தளம் தந்தாலும், உயர்கல்விதான் மாணவ-மாணவிகளின் எதிர்காலத்துக்கு ஏணியாக அமைகிறது. 12-ம் வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியை பார்த்து, பார்த்து தேர்வு செய்து படிக்கிறார்கள். அவ்வாறு படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும்போதே தொழில் சார்ந்த வழிகாட்டுப் பாதையை உருவாக்கித் தரவேண்டும் என்ற நோக்கில், அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது.

அரியலூர்

புதிய பாடத்திட்டம்

அதன் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டதுதான், முதல்-அமைச்சரின் கனவுத்திட்டமான 'நான் முதல்வன்' திட்டம். அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களையும் உயர்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தில் என்ஜினீயரிங் மாணவர்களை தொடர்ந்து, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்பட இருக்கிறார்கள்.

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த மாதம் உயர் அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆகியோருடன் ஒரு ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார்.

அப்போது 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்கல்வி வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. குறிப்பாக பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்த விவகாரம் முக்கியமாக பேசப்பட்டது. மாணவர்களை வேலை பெறுவோராக மட்டுமல்லாமல், வேலை தருபவர்களாகவும் மாற்றும் விதத்தில் புதிய பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அடுத்த கல்வி ஆண்டில்...

அதன்படி, பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. இதுதொடர்பாக புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் வழங்கப்பட இருக்கிறது.

இந்த கூட்டத்தின் நிறைவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, 'அறிவியல், கலை, மனிதநேயம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளும் திறன் சார்ந்ததாக இருக்கும். துணைவேந்தர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் பின்பற்றப்படும்' என்றார்.

குறிப்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது.

13 பல்கலைக்கழகங்கள்

தமிழ்நாட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைப்பில் இருக்கும் கல்லூரிகளில் இந்தப் பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

இதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அந்தப் பாடங்களுடன் திறன், கணினி சார்ந்த புதிய தோற்றத்தில் பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன.

இந்த திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் அமலுக்கு வந்தால் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் இருக்குமா? என்பது பற்றி பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

வரவேற்கத்தக்கது

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தீபா:- அனைத்து கல்லூரிகளிலும் தமிழ், ஆங்கிலம் ஒரே பாடத்திட்டமாக கொண்டு வருவது வரவேற்கத்தக்கது தான். படிக்கும் போதே வேலைவாய்ப்பை அறியும்படி திறன் சார்ந்த திட்டங்களையும் சேர்ப்பதாக கூறி இருக்கிறார்கள். நிச்சயம் அது மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் அந்தந்த பல்கலைக்கழகத்தின் வழியை பின்பற்றி பாடத்திட்டங்களை அமைப்பது நல்லது.

உலகளவில் பாராட்டப்படும்

பாரதிதாசன் பல்கலைக்கழக சிண்டி கேட் உறுப்பினர் எம்.ஆர்.ரகுநாதன்:- இந்திய அளவில் ஒரே பாடத் திட்டம் வரவேற்க கூடியது தான். அதே நேரத்தில் இந்திய அளவில் ஒரே பாடத்திட்டம் தயாரிக்கும் போது சாதி, மதம் மற்றும் கட்சி பாகுபாடு இல்லாமல் அந்த பாடத்திட்டம் இருக்க வேண்டும். மேலும், பாடத்திட்டம் தயாரிக்கும் குழு உலக நாடுகளுக்கு சென்று அங்குள்ள கல்வி தரங்களை பார்த்து அதில் சிறந்த பாடங்களை தேர்வு செய்து, இந்திய பாடத்தையும் படித்து, இரு கருத்துருக்களையும் உள்வாங்கி நல்ல பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால் தான் இந்திய கல்வி தரம் உலகளவில் பாராட்டப்படும்.

பன்முக திறன்கள்

அரியலூர் அரசு கலைக்கல்லூரி ஆங்கில பேராசிரியர் வேலுச்சாமி:- புதிய கல்வி கொள்கை வரவேற்க தக்கது. நமது பாரத நாட்டில் அனைத்து மாநில மக்களையும் சமமாக நடத்துவது போல் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க செய்யும் என்பதே நிறைவை தருகிறது. மேலும் நம் மாணவர்கள் உயர் கல்வியில் பன்முக திறன்களுடன் தங்களின் முக்கிய பாடங்களை கற்றுத்தேற வழி வகைகள் செய்வதுடன் அனைத்து மாநில மாணவர்களும் ஏற்ற தாழ்வுகள் இன்றி சமம் என்ற எண்ணம் உருவாகும்.

வெவ்வேறு பாடத்திட்டம்

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் அருள்:- பல்கலைக்கழகங்கள் கலை- அறிவியல் படிப்புகள் சம்பந்தப்பட்டவை. அவை தங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம், பாடத்திட்டத்தை உருவாக்குவது, தேர்வுகள் நடத்தி பட்டச்சான்றிதழ்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்கின்றன. தற்போது ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு பாடத்திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. உதாரணத்துக்கு ஒரு பல்கலைக்கழகத்தின் பி.எஸ்சி. தாவரவியல் படிப்புக்கான பாடத்திட்டம் மற்றொரு பல்கலைக்கழகத்தின் இதே பட்டப்படிப்பை போல் இருப்பதில்லை. இதனால், ஒரே பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பு என்றாலும் ஒவ்வொன்றும் மற்ற பல்கலைக்கழக படிப்புக்கு இணையானதா? என்ற சிக்கல் அடிக்கடி எழுகிறது. பாடத்திட்டம் எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்பட்சத்தில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மாநிலத்துக்குள் எளிதாக வேறு கல்லூரிக்கு மாறி படிப்பை தொடரலாம். அனைத்து பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டமும் இணையானதாக ஏற்றுக்கொள்ளப்படும். பாடத்திட்டம் ஒன்றுபோல் இருப்பதால் கல்வித்தரமும் மாநிலம் முழுவதும் சமமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கருத்துகள் தெரிவிக்க ஒரு மாதம் அவகாசம்

பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டம் மாற்றம் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது தமிழ்நாடு உயர்கல்வி மன்றம்தான். தற்போது இந்த மன்றம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாதிரி பாடத்திட்டங்களை வடிவமைத்து தயாராக வைத்துள்ளது. இதனை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்துகளையும் கேட்டுப்பெற இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் ராமசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் மாதிரி பாடத்திட்டங்கள் தயார்நிலையில் இருக்கின்றன. அடுத்த வாரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்ப இருக்கிறோம். இதனை அடிப்படையாக வைத்து அந்தந்த பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். நாங்கள் அனுப்பும் பாடத்திட்டங்களில் 25 சதவீதம் வரை அவர்களுக்கு தேவையிருப்பின், அதில் மாற்றம் செய்து கொள்ளலாம். மீதமுள்ள 75 சதவீதம் உயர்கல்வி மன்றம் கொடுக்கும் பாடத்திட்டங்களை கொண்டதாகவே இருக்கும்.

இதுபற்றிய கருத்துகளை அந்தந்த பல்கலைக்கழகங்கள் ஒரு மாதத்துக்குள் எங்களுக்கு தெரிவிக்க அவகாசம் வழங்கப்படும். பின்னர், அவர்கள் இந்த பாடத்திட்டங்களை அவரவர் கல்வி கவுன்சிலில் முன்வைத்து, செனட், சிண்டிகேட் கூட்டம் வாயிலாக நடைமுறைப்படுத்துவார்கள். 2023-24-ம் கல்வியாண்டில் இந்த புதிய பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம். அதேபோல், பல்கலைக்கழகங்கள் கொண்டு வரும் பாடத்திட்டங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்தால், அதில் தலையிட்டு ஒழுங்குப்படுத்த எங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story