பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
x

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது.

திருச்சி

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஆர்.எஸ்.எஸ். சார்பில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறுவிளைவிக்கக்கூடாது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து செல்லக்கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் கோர்ட்டில் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி திருச்சியில் நேற்று மாலை 4 மணி அளவில் மரக்கடை பகுதியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது. ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகாலெட்சுமி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போலீஸ் பாதுகாப்பு

மரக்கடையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் மேலப்புலிவார்டுரோடு, தெப்பக்குளம், கல்லூரிச்சாலை, சத்திரம் பஸ் நிலையம், சிந்தாமணி அண்ணாசிலை வழியாக அங்குள்ள மைதானத்தை சென்றடைந்தது. அங்கு ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் பேசினார்கள். முன்னதாக ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் வழிநெடுக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் ஆங்காங்கே தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


Next Story