வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு


வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் வட்டம், பூங்குடி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த (30-7-2023) அன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஐந்து நபர்களில் கோவில்பட்டியைச் சேர்ந்த வீரமுத்து, த/பெ.கருப்பையா (வயது 31) என்பவர் 3-8-2023 அன்றும், திருமலை, த/பெ. ஆறுமுகம் (வயது 30) என்பவர் 4-8-2023 அன்றும், வெள்ளனூரைச் சேர்ந்த சுரேஷ், த/பெ.பழனி (வயது 35) என்பவர் இன்றும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வைரமணி, மற்றும் குமார் ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story