விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டு


விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:45 PM GMT)

பண்ருட்டி அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டுக்குள் புகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே ஏ.ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 69) விவசாயி. இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் இருவரும் சொந்த வேலை காரணமாக நேற்று பகல் 12 மணி அளவில் கடலூருக்கு சென்றனர். பின்னர் அங்கு வேலை முடிந்ததும் மீண்டும் 3 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.

வலைவீச்சு

இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ராமலிங்கம் தனது மனைவியுடன் வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story