விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் தங்கம், வெள்ளி கொள்ளை


விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் தங்கம், வெள்ளி கொள்ளை
x
தினத்தந்தி 31 Aug 2023 8:45 PM GMT (Updated: 31 Aug 2023 8:45 PM GMT)

பொள்ளாச்சி அருகே விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் தங்கம், வெள்ளி கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் தங்கம், வெள்ளி கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயி

பொள்ளாச்சியை அடுத்த ஆ.சங்கம்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 70). விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களது மகன் மோகன். இவர் நார்வே நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இதற்கிடையில் ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று ஜோதிடர் கூறியதால் நாகராஜ் தனது மனைவி லட்சுமியுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணிக்கம்பட்டி அருகே சிவசக்தி அனன்யா கார்டனில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடியேறினார். ஆனாலும், ஆ.சங்கம்பாளையத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

கொள்ளை

இந்த நிலையில் அவர் நேற்று காலையில் அந்த வீட்டுக்கு வந்தார். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

விசாரணை

இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதில், கடந்த ஜூலை மாதம் நாகராஜின் மகன் மோகன் சொந்த ஊருக்கு வந்து அந்த வீட்டில் தங்கியிருந்து உள்ளார், கடந்த 13-ந் தேதி அவர் மீண்டும் நார்வே நாட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிந்திருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story