21¾ பவுன் நகைகள் கொள்ளை


21¾ பவுன் நகைகள் கொள்ளை
x

வீட்டின் பூட்டை உடைத்து 21¾ பவுன் நகைகள் கொள்ளை

ராமநாதபுரம்

பரமக்குடி

பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் மல்லிகை நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன்(49). இவர் பரமக்குடியில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இவரது மனைவி பரமக்குடியில் உள்ள கால்நடை மருத்துவமனை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை நாகராஜன் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று விட்டார். அவரது மனைவி குழந்தைகளும் வீட்டில் இல்லை. இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 21¾ பவுன் நகைகள், ரூ.13 ஆயிரம், செல்போன் ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனர். வீட்டுக்கு வந்த பார்த்த நாகராஜன் வீடு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகைகள், பணம் ஆகியவையும் காணாமல் போய் இருந்தது. உடனே இதுகுறித்து அவர் எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வந்து பார்வையிட்டனர். பின்பு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர். ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் எமனேசுவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story