குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி


குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 13 Nov 2022 6:45 PM GMT (Updated: 13 Nov 2022 6:46 PM GMT)

மயிலம் பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

விழுப்புரம்

மயிலம்

மயிலம் ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கூட்டேரிப்பட்டு சந்தை அருகே உள்ள அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அங்குள்ள மின்கம்பத்தை தண்ணீர் சூழ்ந்ததால் மின்கசிவு ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர். ஆண்டுதோறும் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்து வருவதாகவும், தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். தொடர் மழையால் மயிலம் அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்தின் மேற்கூரையில் நீர் கசிவு இருப்பதால் எங்கே கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் நோயாளிகள் உள்ளனர். இதேபோல் சார்பதிவாளர் அலுவலகம், மயிலம் போலீஸ் நிலையம் உள்ளிட்ட அலுவலகங்களில் மேற்கூரையில் நீர்கசிவு உள்ளதால் அலுவலக ஊழியர்கள் எப்போது என்னவாகுமோ? என்ற அச்சத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.


Next Story