நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் வழங்க கூடாது


நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் வழங்க கூடாது
x
தினத்தந்தி 3 Jun 2023 6:45 PM GMT (Updated: 3 Jun 2023 6:45 PM GMT)

நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் வழங்க கூடாது என சாலை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை

நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் வழங்க கூடாது என சாலை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோட்ட மாநாடு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் கோட்ட மாநாடு சிவகங்கையில் உட்கோட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. உட்கோட்ட இணைச்செயலாளர் மருது வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் மாரி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் உட்கோட்ட செயலாளர் சேதுராமன், உட்கோட்ட பொருளாளர் கருப்பையா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் சின்னப்பன், வட்ட கிளை செயலாளர் மணிமாறன், நடராஜன், பாண்டித்துரை மாவட்ட முன்னாள் செயலாளர் பாண்டி, ஜெயபிரகாஷ் ஆகியோர் பேசினா். சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்தையா நிறைவு உரையாற்றினார்.

சாலை பராமரிப்பு

மேலும் மாநாட்டில், சாலை பணியாளர்கள் 41 மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன்கள் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் சாலை பராமரிப்பை தனியாரிடம் வழங்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும், தனியார் பராமரிக்கும் பகுதியில் சாலை பணியாளர்களை பயன்படுத்தக்கூடாது.

நெடுஞ்சாலைத் துறையில் பராமரிப்பு பணிக்கு 5 கிலோ மீட்டருக்கு இரண்டு சாலை பணியாளர்கள் வீதம் நியமனம் செய்து கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு பணிநீக்க காலத்திலும் பணிக்காலத்திலும் உயிர் நீத்த குடும்பத்தின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story