பொதுமக்களிடமான அணுகுமுறை குறித்து அறிவுறுத்த வேண்டும்


பொதுமக்களிடமான அணுகுமுறை குறித்து அறிவுறுத்த வேண்டும்
x
தினத்தந்தி 13 April 2023 6:45 PM GMT (Updated: 13 April 2023 6:46 PM GMT)

பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு பொதுமக்களிடம் எவ்வாறு அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும் என்பதை மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு பொதுமக்களிடம் எவ்வாறு அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும் என்பதை மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

டி.ஜி.பி. உத்தரவு

போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீஸ் நிலையங்களுக்கு வரும்போது மக்களை வரவேற்று அவர்களது தேவைகளை அறிந்து புகார் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மாவட்ட போலீஸ் நிர்வாகமும் போலீஸ் நிலையங்களுக்கு வருவோர் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதை கண்டறிய அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் கணினி வசதி செய்ய ஏற்பாடு செய்து வருகிறது. பொதுமக்களிடம் போலீசாரின் அணுகுமுறை அவர்கள் நட்புடன் இருக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் நோக்க மாகும். இந்நிலையில் நேற்று விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் முதியவர் ஒருவர் நடந்து செல்ல முடியாத நிலையில் பஸ் நிலையத்தின் நுழைவாயிலுள்ள ஆட்டோ நிறுத்தத்திலிருந்து ஆட்டோவை உள்ளே வரச்சொல்லி ஏறினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆட்டோ டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அந்த முதியவர் போலீஸ் அதிகாரியிடம் தன் இயலாமையால்தான் ஆட்டோ உள்ளே வந்ததாக தெரிவித்தார். ஆனால் அவரிடமும் முரண்பாடாக அந்த போலீஸ் அதிகாரி பேசியதாக தெரிகிறது.

கோரிக்கை

இந்தசெயல் மாநில, மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு முரண்பாடாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் உள்ள நல்லுறவு பாதிக்கப்படுவதுடன், போலீசாருக்கும் பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் நிலையுள்ளது. எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படும் போலீஸ் அதிகாரி மற்றும் போலீசாருக்கும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பதை உரிய முறையில் அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Next Story