40 சதவீத தனிநபர் கழிவறைகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்படாத நிலை


40 சதவீத தனிநபர் கழிவறைகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்படாத நிலை
x
தினத்தந்தி 9 March 2023 6:45 PM GMT (Updated: 9 March 2023 6:46 PM GMT)

நடப்பு நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 40 சதவீத தனிநபர் கழிவறைகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்படாத நிலை உள்ளது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

நடப்பு நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 40 சதவீத தனிநபர் கழிவறைகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்படாத நிலை உள்ளது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தூய்மை பாரத இயக்கம்

மத்திய அரசு கிராம பகுதிகளில் தனிநபர் கழிவறைகளை கட்டி சுகாதாரத்தை பேணும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கழிவறைகள் கட்டும் அனைவருமே திட்டத்தின் கீழ் பயனாளிகள் ஆவர். நடப்பு நிதியாண்டிக்கு மாவட்டத்தில் உள்ள 11 யூனியன் பகுதிகளிலும் 2,589 தனிநபர் கழிவறைகள் கட்டுவதற்கு ரூ. 3 கோடியே 10 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 1,466 கழிவறைகளுக்கு மட்டுமே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு முடிவடையும் நிலையில் இன்னும் 1,123 தனிநபர் கழிவறைகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. இதில் அதிகபட்சமாக விருதுநகர் யூனியனில் 315 தனி நபர் கழிவறைகளுக்கும், சாத்தூரில் 205 கழிவறைகளுக்கும், சிவகாசியில் 215 கழிவறைகளுக்கும், ராஜபாளையத்தில் 119 கழிவறைகளுக்கும் நிர்வாக அனுமதி வழங்கப்படாத நிலை உள்ளது.

வலியுறுத்தல்

தூய்மை பாரத இயக்கத்தின் நோக்கமே கிராமப் பகுதிகளில் திறந்தவெளி கழிவறைகளை தவிர்ப்பதற்காக வீடுகளில் தனி நபர் கழிவறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது தான். அந்த வகையில் திட்டத்தின் கீழ் கிராம பகுதிகளில் எளிதாக பயனாளிகளை கண்டறிய முடியும். அவ்வாறிருக்கையில் நடப்பு நிதியாண்டு முடிவடையும் தருவாயிலும் இன்னும் 40 சதவீத பயனாளிகள் கண்டறியப்படாத நிலை உள்ளது. நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள பணிகளும் இன்னும் முடிவடையாத நிலையே நீடிக்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் முக்கியத்துவம் கருதி பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story