ஓடை, குளம் மற்றும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்-ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்


ஓடை, குளம் மற்றும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்-ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
x

வடகிழக்கு பருவமழையையொட்டி ஓடைகள், குளம் மற்றும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரூர்

ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகள், ஓடைகள், குளம் மற்றும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கரைகளை பலப்படுத்திட வேண்டும்.

பழுது ஏற்பட்டுள்ள மதகுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். வெள்ள நீரை பாதுகாப்பாக வடிகால் மூலம் வெளியேற்ற அமைப்புகளை உருவாக்க வேண்டும். வெள்ளத்தடுப்புக்காக மணல் மூட்டைகளை தேவையான அளவுக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பான இடங்களில்...

பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உணவுப்பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும். மேலும் தேவையான மருந்து பொருட்களை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு இடங்களை தேர்வு செய்து வைத்திட வேண்டும். கால்நடைகள் இழப்புகள் ஏற்படாவண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மண்சுவர் வீடுகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து தொற்றுநோய் ஏற்படா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள தேவையான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வெள்ள அபாய எச்சரிக்கை

மருத்துவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும். வெள்ள நீரை வெளியேற்ற தேவையான ஜெனரேட்டர், மோட்டார் மற்றும் பேரிடர் காலங்களில் தேவைப்படும் ரம்பம், பொக்லைன் எந்திரங்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மின்தடை ஏற்பட்டால் உடனே சரிசெய்ய ஊழியர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். மின்கம்பங்கள், மின்மாற்றிகளை முன்கூட்டியே தணிக்கை செய்து சரிசெய்திட வேண்டும்.

வெள்ள காலங்களில் ஆற்றில் வரும் கூடுதல் தண்ணீரின் அளவை கண்காணித்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை தெரியப்படுத்துவதுடன் மழை வெள்ள காலங்களில் உதவி தேவைப்படுவோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு உதவி மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.


Next Story