சிறுவனின் உணவுக்குழாயில் இருந்த 5 ரூபாய் நாணயம் அகற்றம்


சிறுவனின் உணவுக்குழாயில் இருந்த 5 ரூபாய் நாணயம் அகற்றம்
x

அதிநவீன சிகிச்சை மூலம் சிறுவனின் உணவுக்குழாயில் இருந்த 5 ரூபாய் நாணயத்தை அகற்றி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

நாணயத்தை விழுங்கிய சிறுவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பெருகோபனப்பள்ளியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய மகன் தீபக்குமார் (வயது 11). இவன் கடந்த மாதம் 26-ந் தேதி மதியம் தவறுதலாக 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டான்.

இதையடுத்து அவனை பெற்றோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதையடுத்து சிறுவன் தீபக்குமாருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் உணவுக்குழாயின் தொடக்கத்தில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது தெரிய வந்தது.

அகற்றம்

இதையடுத்து அவசரமாக அறுவை சிகிச்சை செய்து நாணயத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சுஜய்குமார், சபரீஷ், வினோத்குமார், மயக்கவியல் மருத்துவ நிபுணர்கள் நந்தபிரபு, சுபா, பிரவீன்குமார் தலைமையில் அதிநவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 5 ரூபாய் நாணயம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது உள்நோக்கி கருவி மூலம் நாணயம் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து சிறுவன் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் டீன் அசோகன் கூறியதாவது:-

இலவசம்

இது போன்ற அறுவை சிகிச்சைகளை தனியார் ஆஸ்பத்திரிகளில், வெளி இடங்களில் செய்ய ரூ.50 ஆயிரம் வரையில் செலவு ஏற்படும். தமிழக அரசால் முற்றிலும் இலவசமாக சிறப்பு வாய்ந்த காது, மூக்கு, தொண்டை பிரிவு அறுவை சிகிச்சை நிபுணர்களால், பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் மூலம் சிறந்த முறையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story