விக்கிரவாண்டி ஆசிரம நிர்வாகியின் மனைவி உள்பட மேலும் 4 பேர் கைதுஆசிரமத்தில் தங்கியிருப்பவர்களை கடத்தி சென்று விற்பனை செய்ததாக பரபரப்பு புகார்


தினத்தந்தி 15 Feb 2023 6:45 PM GMT (Updated: 15 Feb 2023 6:46 PM GMT)

விக்கிரவாண்டி குண்டலப்புலியூர் ஆசிரம வழக்கில் நிர்வாகியின் மனைவி உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆசிரமத்தில் தங்கியிருப்பவர்களை கடத்தி சென்று விற்பனை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமம் இயங்கி வருகிறது. இதை கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி(வயது 45) என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என்று சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு, திருப்பூரை சேர்ந்த ஹனிதீன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந்தேதி ஜாபருல்லா(45) என்ற மனநலம் பாதிக்கப்பட்டவரை சேர்த்தார். இதன்பின்னர் ஹனிதீன் அமெரிக்கா சென்றுவிட்டார். அதன் தொடர்ச்சியாக 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்தார்.

புகாரை ஏற்க போலீஸ் மறுப்பு

அப்போது தான் ஆசிரமத்தில் சேர்த்தவாின் நிலை என்ன என்பது குறித்து அறிய ஹனிதீன் நேரில் பார்க்க சென்றார். அப்போது, ஆசிரம உரிமையாளர் ஜூபின் பேபி இடப் பற்றாக்குறையால் பெங்களூருவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு ஜாபருல்லாவை இடமாற்றம் செய்துள்ளோம். அங்கு சென்று பாருங்கள் என்று கூறினார்.

அவர் கூறியபடி அங்கு சென்று பார்த்தபோது, ஜாபருல்லாவை காணவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் குண்டலப்புலியூர் வந்து, கேட்டார். அப்போது, ஆசிரமத்தினா் இங்கிருந்து 50 பேர் மாயமாகி விட்டனர். அதில் ஜாபருல்லாவும் ஒருவர் என்று தெரிவித்தனர். ஆசிரமம் தரப்பில் அளித்த பதில்கள் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.

இது தொடர்பாக கெடார் போலீசில் ஹனிதீன் புகார் அளித்தார். ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.

ஆட்கொணர்வு மனு

இதையடுத்து அவர், சென்னை ஐகோா்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

கோர்ட்டு உத்தரவு படி, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் 10-ந்தேதி, ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பணியாளர்கள் 27 பேர் உள்பட சுமார் 150 பேர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை மற்றும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமை

இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு கெடார், ஆசிரமத்தில் தங்கியிருந்த கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரும் தனித்தனியே புகார் அளித்துள்ளனர்.

இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

மனநல காப்பகம் உரிய அனுமதி பெறலாமல் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு தனிநபரின் விருப்பம் இல்லாமல், அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு மொட்டை அடித்து, உடல் ரீதியாக அசிங்கப்படுத்தி, அவர்களது குடும்பத்தினர் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாத வகையில், வெளியே விடாமல் அடைத்து வைத்துள்ளனர்.

அவர்களை சங்கிலியால் கட்டிப்போட்டு, சரியான மருத்துவசிகிச்சை, உரிய உணவு வழங்காமல் இருந்துள்ளனர். பெண்களை அடித்து கொடுமை படுத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். மேலும் அங்கு உள்ளவர்களை வியாபார ரீதியாக வேறு மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்து, கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் ஆசிரமம் மீது சந்தேகம் எழுகிறது.

அரசு விதிமுறைகளை பின்பற்றாமலும், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

13 பிரிவுகளின் கீழ் வழக்கு

இதுகுறித்த புகார்களின் பேரில் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேலாளர் கேரளாவை சேர்ந்த விஜி மோகன்( 46), பணியாளர்கள் நாரசிங்கனூரை சேர்ந்த அய்யப்பன், பெரியதச்சூர் விநாயகபுரத்தை சேர்ந்த கோபிநாத் (24), தென்காசி முத்துமாரி (35) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்கள் மீது ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சித்ரவதை செய்தல், உள் நோக்கத்தோடு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வெளி மாநிலத்திற்கு அழைத்து செல்லுதல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மருத்துவமனையில் கைது

இவர்களில், மேலாளர் விஜி மோகன், ஊழியா்கள் அய்யப்பன், கோபிநாத், முத்துமாரி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி குரங்கு கடித்ததால் காயம் அடைந்ததாக கூறி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அதேபோல் அவரது மனைவி மரியாஜூபின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதனால் இவர்கள் இருவரையும் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், உடல்நலம் சரியானதை அடுத்து, மரியாஜூபின் நேற்று மதியம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, மரியாஜூபினை கைது செய்து, விசாரணைக்காக கெடார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதேபோன்று, ஆசிரமத்தில் பணியாளராக பணியாற்றி வந்த விழுப்புரம் அருகே அயனம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபாலன்(34), தெலுங்கானாவை சேர்ந்த சதீஷ்(35), கேரளா மாநிலம் பாலக்காடு தாஸ்(75) ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு, நேற்று அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாபருல்லா கதி என்ன?

ஜூபின்பேபி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர், இன்னும் இரு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து, அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஜூபின்பேபி கைதுக்கு பின்னரே, ஆசிரமத்தில் இருந்து மாயமானதாக கூறப்படும் ஜாபருல்லா(45) மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் நிலை குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கலெக்டர் உத்தரவு

இதற்கிடையே, ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர், முதியோர்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்பட 109 ஆண்கள், 33 பெண்கள் என்று மொத்தம் 142 பேர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், பிரச்சினைக்குரிய ஆசிரத்தை சீல் வைக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் பழனி நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தார்.

சீல் வைப்பு தொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:-

ஆசிரத்தில் இன்னும் சிலர் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளிக்க இருக்கிறோம். படிப்படியாக இங்கிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இதுபோன்ற நடவடிக்கை முழுமை பெறுவதற்கு இன்னும் ஓரிரு தினங்கள் ஆகும். அதன்பின்னரே ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


Next Story