கூடலூர், பந்தலூர் பகுதியில் மழை: முன்கூட்டியே பூத்த காபி செடிகள் -விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்ச


கூடலூர், பந்தலூர் பகுதியில் மழை: முன்கூட்டியே பூத்த காபி செடிகள் -விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்ச
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 3 Feb 2023 6:46 PM GMT)

கூடலூர், பந்தலூர் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் காபி செடிகள் முன்கூட்டியே பூத்து காணப்படுகிறது. இதனால் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர், பந்தலூர் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் காபி செடிகள் முன்கூட்டியே பூத்து காணப்படுகிறது. இதனால் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காபி செடிகள்

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விளைச்சல் பிரதானமாக நடைபெற்று வருகிறது. ஊட்டி குன்னூர் கோத்தகிரி பகுதியில் மலை காய்கறி விவசாயமும் நடைபெற்று வருகிறது. கூடலூர், பந்தலூர் பகுதியில் தேயிலைக்கு இணையாக காபி விவசாயம் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து வயநாடு மாவட்டத்திலும் காபி விவசாயம் பெரும்பான்மையாக நடைபெறுகிறது. அரபிக்கா, ரொபஸ்டா என 2 வகை பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் காபி பழங்கள் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு தாமதமாக பெய்த பருவ மழையால் காபி விளைச்சலும் பாதிக்கப்பட்டது. இதனால் அறுவடை பணியும் முடிவடையாத நிலையில் உள்ளது.

முன்கூட்டியே பூத்தது

இந்த நிலையில் கடந்த வாரம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக காபி செடிகள் தற்போது பூத்து காணப்படுகிறது. இதனால் தோட்டங்கள் முழுவதும் பூக்களின் வாசனை நிலவுகிறது. மேலும் காபி செடிகள் முன்கூட்டியே பூத்துள்ளதால் பூக்கள் பிஞ்சுகளாக மாறும் சமயத்தில் மழை பெய்தால் மட்டுமே விளைச்சல் பாதிக்காமல் இருக்கும் என கூறப்படுகிறது.காபி பூக்கள் தற்போது பூத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். இது குறித்து காபி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- வழக்கமாக அறுவடை பணி முழுமையாக முடிவடைந்த பின்னர் மார்ச் மாதம் கோடை மழை பெய்யும். இந்த சமயத்தில் சரியான பருவத்தில் காபி செடிகள் பூக்க தொடங்கும். தொடர்ந்து மே மாதத்தில் கோடை மழை பரவலாக பெய்யும் போது காபி பூக்கள் பிஞ்சுகளாக வளரும். அதன்பின்னர் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் காலநிலையை ஏற்று காபி காய்கள் விளையும். ஆனால் இந்த ஆண்டில் முன்கூட்டியே காபி செடிகள் பூத்துள்ளது. வரும் வாரங்களில் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே விளைச்சல் பாதிக்கப்படாமல் இருக்கும். ஆனால் தொடர்ந்து மழை பெய்தால் காபி பூக்கள் உதிர்ந்து விளைச்சல் பாதிக்கப்படும். இடைப்பட்ட நேரத்தில் மட்டும் மழை பெய்தால் காபி விளைச்சல் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story